செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் ரேவதி, நில மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு செய்து தருவதாக கூறி ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டார். இந்நிலையில் முதல் கட்டமாக ரூ.2 லட்சம் தரும்படி வற்புறுத்தினார். இதனையடுத்து லஞ்சம் தர மறுத்த நபர் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். பின்னர் டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரன் தலைமையில் போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். இதனால் ரேவதி ரூ.2 லட்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த பிரவீன்குமாரும் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து 4 மணி நேரம் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் ரேவதி 2021 முதல் அலுவலகத்தில் பணியாற்றி, அசிஸ்டெண்ட் குணசுந்தரியுடன் இணைந்து லஞ்சம் வசூலித்து வந்தார். செட்டில்மெண்ட், அரசு நிலங்கள், சுடுகாடு உள்ளிட்டவற்றுக்கு லஞ்சம் பெறாமல் வேலை நடக்காது என கூறப்படுகிறது. தற்போது அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
