கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில், தன் மகனை கிருஷ்ணா ஆற்றில் வீசி ஒரு தந்தை கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாகதானாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் அரகேரி என்பவர், தனது மனைவி பாக்கியஸ்ரீயின் நடத்தையில் சந்தேகம் கொண்டிருந்தார். மேலும், தனது மகன் சித்தார்த் தன்னைப்போல் இல்லை என்று நண்பர்கள் கேலி செய்ததால் ஆத்திரமடைந்த மல்லிகார்ஜுன், கடந்த மார்ச் 16 அன்று மகனைப் பள்ளியில் சேர்ப்பதாகக் கூறி அழைத்துச் சென்று ஆற்றில் வீசியுள்ளார்.
இந்தக் கொடூரச் செயல் நடந்து பல நாட்களாகியும் யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஏப்ரல் 1-ஆம் தேதி மகனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, சிறுவனை வீட்டிற்கு அழைத்து வருமாறு மனைவி பாக்கியஸ்ரீ தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். சில நாட்கள் மல்லிகார்ஜுன் சாக்குப்போக்கு சொல்லித் தப்பித்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென அவர் தலைமறைவானார். இதனால் சந்தேகம் அடைந்த பாக்கியஸ்ரீ, அவர் குறிப்பிட்ட பள்ளிக்குச் சென்று விசாரித்தபோது தன் மகன் அங்கு சேர்க்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, தனது கணவர் மற்றும் மகன் காணாமல் போனது குறித்து பாக்கியஸ்ரீ விஜயபுரா கிராமப்புற காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், தந்தை மல்லிகார்ஜுன் சந்தேகத்தின் பேரில் தனது சொந்த மகனையே ஆற்றில் வீசிக் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது தலைமறைவாக உள்ள மல்லிகார்ஜுனை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
