ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் மனித நேயத்தையே உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. மார்க்காபுரம் மாவட்டம் திரிபுராந்தகம் கிராமத்தைச் சேர்ந்த சிவா ரெட்டி என்பவருக்கு, பக்கத்து வீட்டில் வசிக்கும் பாஜூபீ என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. தந்தைக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையிலான இந்தத் தொடர்பை ஒன்பது வயதேயான மகள் துளசி வந்தனா கண்டுபிடித்துள்ளார். தனது ரகசியம் மகளுக்குத் தெரிந்துவிட்டதால், அவர் அதைத் தனது மனைவியிடம் கூறிவிடுவார் என்று அஞ்சிய சிவா ரெட்டி, மகளையே தீர்த்துக்கட்டத் துணிந்துள்ளார்.
தன் கள்ளக்காதலைத் தடையின்றித் தொடர வேண்டும் என்பதற்காக, கள்ளக்காதலி பாஜூபீயுடன் இணைந்து சிவா ரெட்டி ஒரு கொடூரத் திட்டத்தைத் தீட்டினார். அதன்படி, ஒருநாள் இரவு தனது தாத்தாவின் அருகே உறங்கிக் கொண்டிருந்த சிறுமி துளசி வந்தனாவை யாருக்கும் தெரியாமல் தூக்கிச் சென்று பாஜூபீயின் வீட்டில் வைத்துள்ளார். அங்கு வைத்து சிறுமியின் வாயில் துணியைத் திணித்துச் சத்தம் போடவிடாமல் தடுத்து, மின்சார வயரால் கழுத்தை இறுக்கிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
மகளைக் கொலை செய்த பிறகு, பாஜூபீ வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேற, சிவா ரெட்டி ஏதுமே அறியாதவர் போலத் தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார். மறுநாள் காலை குழந்தை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் தீவிரமாகத் தேடியுள்ளனர். அப்போது நீண்ட நேரமாகப் பாஜூபீயின் வீடு பூட்டப்பட்டிருப்பதைக்கண்டு சந்தேகமடைந்த மக்கள், பூட்டை உடைத்துப் பார்த்தபோது அங்கு துளசி வந்தனா சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி சிவா ரெட்டி மற்றும் அவரது கள்ளக்காதலி பாஜூபீ ஆகியோரைக் கைது செய்தனர். குற்றவாளிகளைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, ஆத்திரமடைந்த கிராமப் பெண்களும் பொதுமக்களும் சிவா ரெட்டியைச் செருப்பால் அடித்து இழுத்துச் சென்றனர். பெற்ற மகளையே கள்ளக்காதலுக்காகக் கொலை செய்த தந்தையின் இந்த அரக்கத்தனம் அந்தப் பகுதி முழுவதிலும் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
