குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தேசர் தாலுக்கா கிராமம் ஒன்றில், பெற்ற தந்தையே தனது 13 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஜூன் 28-ஆம் தேதி மாலை, குடும்பப் பிரச்சினை காரணமாக தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் சண்டையைத் தவிர்ப்பதற்காக, அந்தப் பெண் தனது 13 வயது மகள் மற்றும் 10 வயது மகனை வீட்டில் விட்டுவிட்டு, அருகில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தந்தை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகளைக் கொடுமைப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.
நள்ளிரவு வாக்கில் அந்தப் பெண் தனது சகோதரியுடன் வீட்டிற்குத் திரும்பிய போது, கணவன் தனது மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். சிறுமி உதவி கேட்டு கூச்சலிடாமல் இருக்க, அவளது வாயில் துணியைத் திணித்து, கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு இந்த கொடூர செயலை அவர் செய்துள்ளார். தாயும் அவளது சகோதரியும் சம்பவ இடத்திற்கு வந்ததைக் கண்டவுடன், குற்றம் சாட்டப்பட்ட தந்தை அங்கிருந்து உடனடியாகத் தப்பியோடிவிட்டார். இதையடுத்து, தாய் அழுதுகொண்டிருந்த தனது மகளை மீட்டு, அவளுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
தந்தை தப்பியோடியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது தம்பி தூங்கிய பிறகு தந்தை தன்னை வற்புறுத்தி, கட்டிப்போட்டு வன்கொடுமை செய்ததை தாயிடம் கூறி அழுதுள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து சிறுமியின் தாய், தனது சகோதரி மற்றும் மைத்துனருடன் தேசர் காவல் நிலையத்திற்குச் சென்று கணவருக்கு எதிராகப் புகார் அளித்துள்ளார். தாயின் புகாரின் பேரில் காவல்துறை உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய தந்தையை தீவிரமாகத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
