தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அதிமுகவில் இருந்து மேலும் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA-க்கள்) தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அடுத்தடுத்த ராஜினமாக்களின் பின்னணியில், அவர்கள் அனைவரும் முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாகக் கூறப்படும் செய்திதான் தற்போதைய ஹாட் டாபிக். முன்னதாக அதிமுக மூத்த நிர்வாகி ஆர்.பி. உதயகுமார், விரைவில் தமிழகத்தில் 12 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா தகவல் அவரது கூற்றை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது.
தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த கையோடு, பிரதான எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த திடீர் முடிவு தமிழக அரசியல் களத்தை சலசலக்க வைத்துள்ளதுடன், தவெக-வின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த விவாதங்களையும் தீவிரப்படுத்தியுள்ளது.
