உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டம், பரௌத் கொத்வாலி பகுதியில் உள்ள முக்கிய பேருந்து நிலைய போலீஸ் சாவடியில் இருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில் இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. பிரபல ரவுடியான வருண் லுஹாரி மற்றும் அவனது கூட்டாளிகள், அங்கிருந்த ஒரு டென்ட் வியாபாரியின் குடும்பத்தினரைக் குறிவைத்து பகல் நேரத்திலேயே கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் வியாபாரியின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்குக் குண்டு காயம் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூட்டின் போது தாக்குதல் நடத்திய ரவுடி வருண் லுஹாரியும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 55 வயதான சோஹன்லால் அகர்வால் மற்றும் அவரது 30 வயது மகன் விகாஸ் ஆகிய இருவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த இரட்டைக் கொலையால் அப்பகுதி மக்களும், வியாபாரிகளும் கடும் ஆத்திரமடைந்தனர். குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும், பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டித்தும் டெல்லி-சஹாரன்பூர் நெடுஞ்சாலையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, காவல்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தாக்குதல் நடந்த இடத்தின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளைப் போலீஸார் கைப்பற்றி விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தத் துயரமான சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
