“மகனின் கண் முன்னே துடிதுடிக்க நடந்த கொடூரம்”… ரூ.10,000 சம்பள பாக்கி கேட்ட விவசாயிக்கு நேர்ந்த கதி… குமரி மாவட்டத்தையே உலுக்கிய பகீர் கொலை….!

By Nanthini on சித்திரை 30, 2026

Spread the love

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே நிலுவைச் சம்பளம் கேட்ட விவசாயியை, மற்றொரு விவசாயி அவரது மகனின் கண் முன்பே வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாழாக்குடி கனமூலம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பலவேசமுத்து மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரும், அவ்வையார் அம்மன் கோவில் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இவர்களுக்கு இடையே வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்கனவே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், விவசாயப் பணிகளுக்காக செல்வகுமார் வழங்க வேண்டிய பத்தாயிரம் ரூபாய் சம்பள பாக்கியை பலவேசமுத்து கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், கனமூலம் புதுக்குடியிருப்பு சாலையில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்தபோது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த செல்வகுமார், தான் மறைத்து வைத்திருந்த தேங்காய் வெட்டும் அரிவாளை எடுத்து பலவேசமுத்தை சரமாரியாக வெட்டியுள்ளார். தந்தையைக் காப்பாற்ற மகன் போராடியும், செல்வகுமாரின் வெறிச்செயலால் பலவேசமுத்தின் வயிறு மற்றும் தலைப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே அவர் குடல் சரிந்து துடிதுடிக்க உயிரிழந்தார். ஒரு சிறிய தொகையையும், தண்ணீர் பங்கீட்டையும் முன்னிறுத்தி ஒரு சக மனிதரின் உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

   

கொலை நடந்த இடத்திலிருந்த பொதுமக்கள் உடனடியாகச் செயல்பட்டு தப்பியோட முயன்ற செல்வகுமாரைப் பிடித்து ஆரல்வாய்மொழி போலீசாரிடம் ஒப்படைத்தனர். உயிரிழந்த பலவேசமுத்தின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், செல்வகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். உழைப்புக்கான கூலியைக் கேட்டதற்காக ஒரு விவசாயி, சக விவசாயியாலேயே வெட்டிக் கொல்லப்பட்ட இந்த கொடூரச் செயல் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.