தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களின் ஆர்வத்தைப் பயன்படுத்திப் பணத்தைத் திருடும் புதிய வகை சைபர் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, மத்திய அரசின் ‘ஜன்தன் திட்டத்தின் கீழ் ரூ.5,000 உதவித்தொகை’, ‘தளபதி விஜய் பெயரில் ரூ.1,499 ஆஃபர்’ மற்றும் ‘ஜிபே (GPay) ரிவார்டு’ போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் சமூக வலைத்தளங்களில் போலி லிங்க்குகள் (Fake Links) வேகமாகப் பரப்பப்படுகின்றன. இலவசங்கள் மற்றும் சலுகைகள் மீது மக்களுக்கு இருக்கும் ஈர்ப்பைப் பயன்படுத்தி, அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைச் சேகரிப்பதே இந்த மோசடி கும்பலின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இந்த விவகாரத்தில் பொதுமக்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சைபர் கிரைம் போலீசார், அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்குரிய லிங்க்குகளை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். அத்தகைய லிங்க்குகளைத் தொடுவதன் மூலம் உங்கள் செல்போன் ஹேக் செய்யப்படவோ அல்லது உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படவோ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் பரப்பப்படும் இதுபோன்ற போலிச் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களில் தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
