உத்தரப் பிரதேச மாநிலம் பலியாவில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசம்கார் மாவட்டத்தைச் சேர்ந்த பங்கஜ் குப்தா என்ற இளைஞர், அண்டை கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் ரகசியத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்தப் பெண் இந்த உறவை முறித்துக்கொள்ள முயன்றபோது, பங்கஜ் குப்தா தன்னிடம் இருந்த ஆபாச வீடியோக்களைக் காட்டி அந்தப் பெண்ணை மிரட்டி, தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மிரட்டலால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், தனது சகோதரர் மற்றும் அண்ணியுடன் இணைந்து பங்கஜை தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார். அதன்படி, கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி ஒரு திருமண விழாவிற்கு வருமாறு பங்கஜை நயவஞ்சகமாக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவரது முகத்தில் அமிலத்தை ஊற்றிச் சிதைத்துவிட்டு உடலை வீசிச் சென்றுள்ளனர்.
பிப்ரவரி 10-ஆம் தேதி முகம் சிதைந்த நிலையில் பங்கஜின் உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். செல்போன் உரையாடல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த அதிர்ச்சி உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. தற்போது அந்தப் பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள இருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
