தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேடக் மாவட்டம் கோட்பாக் பகுதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (35). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது மகன் ராஜேஷுடன் வசித்து வந்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக கூலி வேலைக்குச் சென்று வந்த சுலோச்சனாவிற்கு, அதே பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் கணவன் – மனைவி போலவே பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில், ராஜுவிற்கு தான் வேலை பார்க்கும் இடத்தில் புலி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரிடமும் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இந்த இரட்டை உறவு குறித்து அறிந்த சுலோச்சனா, ராஜுவை கடுமையாக எச்சரித்துள்ளார். புலியுடனான தொடர்பை உடனடியாகக் கைவிடுமாறு அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சுலோச்சனாவின் தலையீடு ராஜுவிற்கு எரிச்சலை ஏற்படுத்தவே, தனது புதிய காதலி புலியுடன் சேர்ந்து வாழ சுலோச்சனாவைத் தீர்த்துக் கட்ட அவர் திட்டம் தீட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 10-ஆம் தேதி இரவு சுலோச்சனாவைச் சந்தித்த ராஜு, புலியுடனான உறவை முறித்துக் கொள்வதாகக் கூறி சமாதானம் செய்துள்ளார். பின்னர் சுலோச்சனா மற்றும் புலி ஆகிய இருவரையும் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு நாகசனப்பள்ளி பாலம் அருகே உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு மூவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, திட்டமிட்டபடி ராஜு மற்றும் புலி ஆகிய இருவரும் இணைந்து சுலோச்சனாவை சரமாரியாகத் தாக்கி கொலை செய்துவிட்டு, உடலை அங்கேயே வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
மறுநாள் காலை தனது தாயைக் காணவில்லை என ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். நாகசனப்பள்ளி பாலத்தின் கீழ் ஒரு பெண்ணின் உடல் கிடப்பதாகப் பொது மக்கள் அளித்த தகவலின் பேரில், போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ராஜு மற்றும் புலி ஆகியோரின் நடமாட்டம் உறுதியானது. அவர்களைக் கைது செய்து விசாரித்ததில், தங்களது காதலுக்கு இடையூறாக இருந்த சுலோச்சனாவை அடித்துக் கொன்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்தச் சம்பவம் மேடக் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
