நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வு பிரிவானது துணை முதலமைச்சரால் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டி தேர்வுகளை எளிதாக அணுகும் வகையில் பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் சிவில் சர்வீஸ் பயின்று வரும் மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு முதல் நிலை தேர்வுக்கு தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்கள் மாதம் 7500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைப் போல முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்து அதற்கான நிதியை அரசு ஒதுக்கி இருந்தது.
இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டின் யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவின்கீழ் 25 ஆயிரம் ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த ஊக்கத்தொகையை பெறுவதற்கு நடப்பு ஆண்டில் யூபிஎஸ்சி முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் https//portal.naanmudhalvan.gov.in/ என்ற இணையதளத்தில் ஜூலை 2 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இருந்த நிலையில் ஜூலை 13 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
