பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா கடந்த 2009-ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவும் சமந்தாவும் நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017-ஆம் ஆண்டு கோவாவில் வைத்து சமந்தாவும் நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக சமந்தா கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டபூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இருவரும் பிரிந்ததற்கான காரணத்தை இன்று வரை வெளிப்படையாக கூறவில்லை. மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு நோயில் இருந்து மீண்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

இதற்கிடையே நாக சைதன்யாவும் பிரபல நடிகை சோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் செய்திகள் உலா வந்தது. இது குறித்து இருவரும் விளக்கம் அளிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. சமந்தா ஆகஸ்ட் 8-ஆம் தேதி தான் நாக சைதன்யாவிடம் தனது காதலை கூறினாராம்.

எனவே அதே தேதியில் வேண்டுமென்றே நிச்சயதார்த்தத்தை வைத்திருப்பதாக இணையத்தில் நெட்டிசன்கள் பேசி வந்தனர். இந்த நிலையில் நாகர்ஜுனா தனது மகனுக்கு நிச்சயம் நடத்தி வைத்தது குறித்து பேசி இருந்தார். அவர் கூறியதாவது, ஆகஸ்ட் 8ஆம் தேதி ரொம்பவே நல்ல நாளாக இருந்தது. அதனால் தான் அன்றைய நாளில் அவசர அவசரமாக நிச்சயதார்த்தத்தை நடத்தினோம். சோபிதாவும் நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர். இதனால் உடனடியாக நிச்சயத்தை முடித்து விட்டோம். திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என கூறியுள்ளார்.

