பண்டிகை நாட்களில் காகத்திற்கு உணவு வைப்பது ஏன் தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க…

By admin on ஆவணி 13, 2024

Spread the love

பொதுவாக பொங்கல், தீபாவளி, சித்திரை விசு அமாவாசை போன்ற இந்து பண்டிகைகளின் போது நம் வீட்டில் பெரியோர்கள் சாப்பாடு சமையல் செய்து முடித்தவுடன் ஒரு சிறிய தட்டிலோ வாழை இலையிலோ உணவை வைத்து மொட்டை மாடியில் கொண்டு காகத்திற்கு வைப்பதை நாம் பார்த்திருப்போம். அதுவும் எச்சில் படாமல் முதன்முதலாக காகத்திற்கு வைக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். அப்படி நம் முன்னோர்கள் காகத்திற்கு பண்டிகை நாட்களில் உணவு வைப்பதற்கான காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?. அதைப்பற்றி இனி விரிவாக பார்ப்போம்.

சனீஸ்வர பகவானின் வாகனம் தான் காகம். அதனால் காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனி பகவானுக்கு மகிழ்ச்சி தருமாம். மேலும் எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழும் இடம் சென்று அவர்களின் நிலையை தெரிந்து கொள்வாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். பண்டிகை நாட்களில் காகத்திற்கு உணவிடும்போது சனி பகவான் மற்றும் எமதர்மன் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம்.

   

   

பொங்கல், தீபாவளி, சித்திரை வருடப்பிறப்பு போன்ற விசேஷ நாட்களிலும் மற்றும் மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற தினங்களிலும் காக்கைகளுக்கு உணவளிப்பது முக்கியமான ஒன்றாகவும் தவறாமல் எல்லோர் வீட்டிலும் கடைப்பிடிக்கும் வழக்கம்மாகவும் இருக்கிறது. காக்கைகள் மறைந்த நம் வீட்டின் முன்னோர்களின் அம்சமாகவும் கருதப்படுகிறது.

 

அதனால் காக்கைகளுக்கு உணவளிப்பது நம் முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து நாம் படைக்கும் உணவுகளை சாப்பிடுவதாக ஐதீகம். ஏன் மற்ற பறவையினத்தை விட்டுவிட்டு காகத்தை வழிபடுகிறார்கள் தெரியுமா? அதற்கான காரணம் காகங்கள் மிகவும் சுத்தமானவை. தினசரி இரண்டு முறை குளிக்கும். தனது துணை இறந்தால் வேறு துணை தேடாது. தூய்மையான ஒழுக்கமான பறவை காகம். ஒற்றுமையாக கூட்டமாக ஒன்று கூடி சாப்பிடும் ஒற்றுமையின் சின்னமாக காகம் பார்க்கப்படுகிறது. தனது இனத்தை சேர்ந்த ஒரு காகம் இறந்து விட்டால் ஒன்று கூடி துக்கம் அனுஷ்டிக்கும். எனவேதான் காகங்களை பித்துருக்களாக நினைத்து அதற்கு உணவளிக்கிறார்கள்.

நம்மால் தினசரி பல பேருக்கு அன்னதானம் செய்ய முடியாது அப்படி அன்னதானம் செய்ய முடியாதவர்கள் ஒரு கைப்பிடி உணவு காகத்திற்கு வைத்தால் நம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். முக்கியமாக அமாவாசை நாட்களில் காகத்திற்கு உணவு வைக்க வேண்டும். நாம் வைக்கும் உணவை காகம் எடுத்து சாப்பிட்டு விட்டால் நம் முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். அப்படி நாம் வைக்கும் உணவை காகம் சாப்பிடாவிட்டால் நம் முன்னோர்கள் ஏதோ வருத்தத்தில் இருக்கிறார்கள் அவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

காக்கைக்கு உணவளிப்பதன் மூலம் சனி தோஷம், பித்ரு தோஷம் விலகுவதால் நம் வீட்டில் சங்கடங்கள் விலகி, குடும்ப ஒற்றுமை மேம்படும். சுப காரியங்கள் நடக்கும். முன்னோர்களின் ஆசி கிடைத்து வம்சம் தலைக்கும், செல்வ வளம் பெருகும் என்று நம்பப்படுகிறது.