இதனிடையே சமீபத்தில் கரூரில் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை எப்படி சட்டரீதியாக கையாளுவது என்பது குறித்து விஜய் தொடர் ஆலோசனையில் உள்ளார். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விஜய்க்கு உதவி தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. மறுபக்கம் தமிழக வெற்றி கழகம் கட்சியை தங்கள் கூட்டணியில் இணைய உள்ளதாக சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சூசகமாக இபிஎஸ் கொடியை காட்டி தெரிவித்திருந்தார்.
ஆனால் இது தொடர்பாக விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. எப்படியாவது விஜயை தங்கள் கூட்டணிக்கு இழுக்க அதிமுக மற்றும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. கரூர் துயர சம்பவத்தால் கலக்கத்தில் இருக்கும் விஜய்க்கு அதிமுக ஆதரவுகரம் நீட்டி உள்ளது. இந்த சூழலில் விஜயுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியானது. தற்போதைய தகவலின் படி அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு 45 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி வழங்க உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
