அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்துள்ளது தருமபுரி மாவட்ட அதிமுக வட்டாரத்தில் புதிய அரசியல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் அணியின் பக்கம் சாய்ந்திருந்த அவர், தற்போது தருமபுரியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று இருகரம் கூப்பி உற்சாகமாக வரவேற்றார்.
அதற்கு எடப்பாடி பழனிசாமியும் பரஸ்பரம் புன்னகையுடன் வணக்கம் தெரிவித்து தனது வரவேற்பை வெளிப்படுத்தினார். இந்த திடீர் சந்திப்பு மற்றும் சுமூகமான அணுகுமுறை காரணமாக, தருமபுரி அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்களும் கருத்து வேறுபாடுகளும் முற்றிலுமாக முடிவுக்கு வந்துள்ளதாகவும், கட்சி மீண்டும் ஓரணியில் திரண்டு வலுப்பெற்றுள்ளதாகவும் தொண்டர்கள் உற்சாகத்துடன் பேசி வருகின்றனர்.
