ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முதலில், அஜீத்குமார் நடித்த அமர்க்களம் படத்தில் ‘காலம் கலிகாலம் ஆகிப் போச்சுடா’ என்ற பாடல் காட்சி மூலம் அறிமுகமானார். பின் பார்த்தேன், ரசித்தேன் என்ற பிரசாந்த் படத்தில் வில்லத்தனமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து சில படங்களில், பாடல் காட்சிகளில் மட்டும் நடித்த ராகவா லாரன்ஸ் பின், அற்புதம் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
தொடர்ந்து முனி படம் லாரன்ஸ்க்கு மிகப்பெரிய அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் கொடுத்தது. காஞ்சனா 2, 3, 4 என பல படங்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகராகி மாறினார். சிவலிங்கா, மொட்ட சிவா கெட்ட சிவா என பல படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டார். இப்போது வந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில், ராகவா லாரன்ஸ் நடிப்பை ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவியின் அப்பா எடிட்டர் மோகன் ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, ஒரு தெலுங்கு படத்தின் ஷூட்டிங் நடந்த போது, பாடல் காட்சிகளில் டான்ஸ் மாஸ்டராக இருந்த லாரன்ஸ் மூவ்மென்ட்ஸ் பார்த்து அசந்து போய்விட்டேன். சந்தோஷத்தில் இந்தாடா, வெச்சுக்கோ என பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொடுத்தேன். லாரன்ஸ் என்ற பெயர், ரசிகர்கள் பார்வையில் சற்று விகல்பமாக இருக்குமோ எனத் தோன்றியது.
லாரன்ஸ் ராகவேந்திரர் பக்தர் என தெரியும். அதனால் அவரை அழைத்து, இனிமேல் உன் பெயர் ராகவா லாரன்ஸ் என மாற்றலாமா எனக் கேட்டேன். நல்லா இருக்கு சார், மாத்திக்கலாம் சார் என்றார். அதன்பிறகு அந்த படத்தில் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் என வரச் செய்தேன். இதெல்லாம், ராகவா லாரன்ஸ்க்கு நினைவிருக்குமா, மறந்துட்டாரா என தெரியவில்லை. ஆனால்,எனக்கு நன்றாக நினைவிருக்கிறது என்று கூறியிருக்கிறார் எடிட்டர் மோகன்.