ஈரோடு பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை “சுயநலம், திமிர் மற்றும் அகங்காரம் பிடித்தவர்” என்று கடுமையாகச் சாடினார். அதிமுக நிர்வாகிகள் உழைப்பால் எம்எல்ஏ ஆன செங்கோட்டையன், தற்போது கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் ஜெயலலிதா பாணியில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். பிறர் நன்றாக இருப்பதைக்கூடப் பொறுக்காத குணம் படைத்தவர் என்றும், கோபியில் இருந்து ஒருவரைக் கூட தன்னை வந்து பார்க்க விடாமல் தடுத்த மோசமான மனிதர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் நடந்த ஒரு ரகசியச் சம்பவத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த எடப்பாடி, செங்கோட்டையனின் மனைவியும் மகனும் நேரில் வந்து அளித்த புகாரின் பேரிலேயே அன்று அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று அதிரடியாகத் தெரிவித்தார். அந்தப் புகாரின் விவரம் மிகவும் கேவலமானது என்பதால் அதைத் தனது பதவிக்கு மரியாதையாக இருக்காது எனக் கூறித் தவிர்க்கும் எடப்பாடி, செங்கோட்டையனைப் போன்ற ஒரு ஆளைக் கட்சியில் வைத்திருப்பதே தவறு என்று ஜெயலலிதா தன்னிடமே கூறியதாகப் பகிரங்கப்படுத்தினார்.
தான் முதலமைச்சராக இருந்தபோது செங்கோட்டையனை அமைச்சராக்கியது தனது தவறு என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, அன்று தனது அறையில் வந்து கண்ணீர் விட்டு அழுத செங்கோட்டையன் இன்று வாய்க்கொழுப்பில் பேசுவதாகச் சாடினார். நட்பின் அடிப்படையில் தனக்கு வாய்ப்பளித்ததற்கு விசுவாசம் காட்டாமல், தற்போது மாற்று முகாமில் போய் துண்டு வாங்குவதாக எள்ளி நகையாடினார். மேலும், 100 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு வந்த செங்கோட்டையன், தன்னைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர் என்றும் காரசாரமாகப் பேசி முடித்தார்.
