முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து அவர் அளித்த பேட்டியின் சட்டப்பேரவையில் திமுக மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் முன்வைக்குமாறு முதலமைச்சரிடம் வலியுறுத்திக் கேள்வி கேட்டதற்காகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இது தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், 2022-ஆம் ஆண்டு கரூரில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்போது சம்பந்தமே இல்லாமல் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சோதனையில் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இருந்து ரூ.40 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட தகவல் முற்றிலும் வடிகட்டிய பொய் என்று அவர் மறுத்துள்ளார். தன் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இருந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஒரு பைசாவைக் கூட எடுத்துச் செல்லவில்லை என்றும், தங்களை அச்சமூட்டவே இத்தகைய பொய்ப் பிரச்சாரங்கள் செய்யப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நாங்கள் ‘மிசா’ போன்ற கடுமையான காலகட்டங்களையே எதிர்கொண்ட இயக்கம் என்பதால், இந்தச் சோதனைகளுக்கு அஞ்சப் போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை” என்று கூறிய அவர், தான் எந்தத் தவறும் செய்யாத பரிசுத்தமானவர் என்றும், தங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீதிமன்றம் மட்டுமே என்பதால் சட்டப்படி நீதிமன்றம் சென்று தான் நிரபராதி என்பதை நிச்சயம் நிரூபிப்பேன் என்றும் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
