தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக இன்று (ஜூலை 3) நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை அவருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதால், இன்றைய விசாரணைக்கு அவரால் ஆஜராக முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமைச்சரின் வழக்கறிஞர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் எ.வ. வேலு தற்போது சிங்கப்பூரில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும், அங்கு அவர் சுமார் 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சிகிச்சை முடிந்து சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பியவுடன், லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் அவரது தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
