ரூ.256 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு, புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில் மீண்டும் மருத்துவ பரிசோதனை நடத்துமாறு மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பக்கவாதம் மற்றும் ஞாபக மறதி போன்ற தீவிர உடல் மற்றும் மனநல பாதிப்புகள் காரணமாக அவரால் வழக்கை எதிர்கொள்ள முடியாது என அவரது தரப்பில் ஏற்கனவே மருத்துவச் சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும், அவர் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளித்ததும், தேர்தலில் வாக்களித்ததும் தொடர்பான வீடியோ ஆதாரங்களை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நேரில் ஆஜராக விலக்கு கோருவதை எதிர்த்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, துரை தயாநிதியின் தற்போதைய மனநிலை மற்றும் உடல்நிலையைத் துல்லியமாக மதிப்பிடும் பொருட்டு, ஜிப்மர் மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவர், நரம்பியல் நிபுணர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்து விரிவான பரிசோதனை செய்து அறிக்கையைச் சமர்ப்பிக்க ஆணையிட்டுள்ளார்.
