ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில், ஜேசிபி ஓட்டுநருக்கும் அதன் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஓட்டுநர் உரிமையாளரின் ஜேசிபி வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உரிமையாளர் காவல் நிலையத்தில் புகாரளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த ஓட்டுநரைக் கைது செய்யத் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
கல்லிகோட், ரம்பா, புருஷோத்தம்பூர் மற்றும் கபிசூர்யநகர் ஆகிய நான்கு காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல்துறையினர் ஒன்றிணைந்து, ஜேசிபி ஓடும் பாதைகளில் தடுப்புகளை அமைத்து அதைத் தடுக்க முயன்றனர். இருப்பினும், ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாக இயக்கி, சாலையில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து காவல்துறைத் தடுப்புகளையும் தகர்த்தெறிந்து தப்பிச் சென்றார். சினிமா பாணியில் நடந்த இந்தத் துரத்தல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/DcIhiDdISYh/?utm_source=ig_web_button_share_sheet
நீண்ட தூரத் துரத்தலுக்குப் பிறகு, குடியாளி பகுதிக்கு அருகே ஜேசிபியை ஒரு விவசாய நிலத்தில் விட்டுவிட்டு ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். காவல்துறையினர் ஜேசிபி வாகனத்தைக் கைப்பற்றியுள்ளனர். தலைமறைவாக உள்ள ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வரும் காவல்துறையினர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்
