விதியை மீறிய 1,420 மருத்துவர்கள்… ரூ.40 லட்சம் அபராதத்துடன் காத்திருக்கும் ஷாக்… முதல்வர் எடுத்த அதிரடி முடிவு…!

By SATHISH R on ஆனி 29, 2026

Spread the love

தமிழகத்தில் அரசு சேவை ஒதுக்கீட்டு முறையின் கீழ், அரசு செலவிலேயே மருத்துவ மேல் படிப்பை முடித்துவிட்டு, ஒப்பந்தப்படி அரசுப் பணிக்குத் திரும்பாத மருத்துவர்கள் மீது மக்கள் நல்வாழ்வுத்துறை தற்போது நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வாறு விதிகளை மீறி, அரசுப் பணிக்கு வராமல் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 1,420 மருத்துவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 680 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ள நிலையில், மீதமுள்ள 740 மருத்துவர்கள் மீதான விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, உயர் கல்வி கற்று சிறப்பு மருத்துவர்களாக மாறும் வாய்ப்பை இந்த சேவை ஒதுக்கீட்டுத் திட்டம் வழங்குகிறது. இதன் முக்கிய நோக்கமே, ஏழை எளிய பொதுமக்களுக்கு தரமான, உயர்தர மருத்துவச் சேவை தங்கு தடையின்றிக் கிடைக்க வேண்டும் என்பதுதான். இந்தத் திட்டத்தின் கீழ் படிக்கும் மருத்துவர்கள், அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி குறிப்பிட்ட ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளிலேயே கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்பது விதியாகும்.

   

இருப்பினும், சமீபகாலமாகப் பல மருத்துவர்கள் எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி அரசுப் பணியைப் புறக்கணித்துவிட்டு, அதிக ஊதியம் தரும் தனியார் மருத்துவமனைகளில் இணைந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக ‘அறப்போர் இயக்கம்’ உள்ளிட்ட அமைப்புகள் தமிழக அரசிடம் புகார் அளித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தின. இதனைத் தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்திய விரிவான ஆய்வில், 1,420 மருத்துவர்கள் தன்னிச்சையாகப் பணிக்கு வராமல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, தற்போது அவர்கள் மீது அரசு விதிகளின்படி, 17 பி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

   

அரசின் அறிவுறுத்தலையும் மீறி பணிக்கு வராத மருத்துவர்கள் மீது பணி நீக்கம் உள்ளிட்ட கடுமையான நிர்வாக நடவடிக்கைகள் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்தத்தை மீறியதற்காக அவர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய 40 லட்சம் ரூபாய் பிணையத் தொகையை (Bond Amount), அதற்கான வட்டியுடன் சேர்த்து வசூலிக்கவும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு செலவில் படித்துவிட்டு மருத்துவர்கள் தனியார் துறைக்குச் செல்வதால், கிராமப்புற மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை ஏற்பட்டு, ஏழை மக்களின் மருத்துவச் சேவை பாதிக்கப்படுவதை இனி அனுமதிக்க முடியாது எனச் சுகாதாரத்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.