இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, பங்குதாரர்கள் வைத்துள்ள ஒவ்வொரு ஒரு பங்கிற்கும் கூடுதலாக ஒரு புதிய பங்கு இலவசமாக வழங்கப்படும். இதற்காக நிறுவனம் தனது இருப்பு மற்றும் உபரி நிதியிலிருந்து சுமார் ரூ.6,325 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த போனஸ் பங்குகள் ரூ.10 முகமதிப்பு கொண்ட முழுமையாகச் செலுத்தப்பட்ட பங்குகளாக விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போனஸ் பங்குகளைப் பெறுவதற்கான தகுதி, குறிப்பிட்ட பதிவு தேதியில் (Record Date) பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே உண்டு. பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஜூன் 12, 2026-க்குள் தகுதியானவர்களின் டீமேட் கணக்குகளில் பங்குகள் தானாகவே கிரெடிட் செய்யப்படும் என்று எல்ஐசி உறுதி அளித்துள்ளது. இதற்கு பங்குதாரர்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த நடவடிக்கை மூலம் சந்தையில் பங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, சிறு முதலீட்டாளர்கள் வாங்குவதற்கு ஏற்ப பங்கு விலை குறையும்.
நிறுவனத்தின் நிதி நிலையைப் பொறுத்தவரை, டிசம்பர் காலாண்டில் எல்ஐசியின் நிகர லாபம் 17 சதவீதம் அதிகரித்து ரூ.12,930 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர ப்ரீமியம் வருமானமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. தற்போது எல்ஐசி பங்குகள் சந்தையில் சுமார் 804 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வருகின்றன. போனஸ் பங்குகள் வழங்கப்படுவதால் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பில் மாற்றம் இருக்காது என்றாலும், இது நிறுவனத்தின் வலுவான நிதி ஆரோக்கியத்தையே காட்டுகிறது என சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நீண்டகால செல்வ வளர்ச்சி வாய்ப்பாக அமையும். பங்குகளின் எண்ணிக்கை இரட்டிப்பாவதால் முதலீட்டு மதிப்பு மாறாது என்றாலும், எதிர்காலத்தில் நிறுவனம் அறிவிக்கும் டிவிடெண்ட் போன்ற பலன்கள் அதிக எண்ணிக்கையிலான பங்குகளுக்குக் கிடைக்கும். கடந்த 2022-ல் சந்தையில் அறிமுகமானது முதல் இதுவரை 5 முறை டிவிடெண்ட் வழங்கியுள்ள எல்ஐசி, தற்போது முதல்முறையாக போனஸ் பங்குகளை அறிவித்து தனது பங்குதாரர்களுக்கு மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளது.
