கனவு சாஸ்திரத்தின்படி, நாம் காணும் சில கனவுகள் நம் நினைவில் நிலைத்து நின்று வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் பல்லியை கனவில் காண்பதற்குப் பல்வேறு பலன்கள் கூறப்படுகின்றன. ஒருவர் தன் கனவில் பல்லி தன் உடலின் மீது விழுவது போல் கண்டால், வரும் நாட்களில் எதிரிகளால் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். பல்லி தலையின் மீது ஏறுவது போல் கண்டால் உடல்நலப் பாதிப்புகளும், வலது தோளில் ஏறுவது போல் கண்டால் மன அழுத்தமும் உண்டாகும். அதே நேரத்தில், இடது தோளின் மீது பல்லி ஏறுவது போல் கனவு கண்டால் புதிய ஆற்றலும், மன தைரியமும் பிறக்கும்.
ஒருவர் தனது கனவில் பல்லி தன்னை விட்டோ அல்லது ஓரிடத்தை விட்டோ ஓடிப்போவது போலக் கண்டால், அது அவரின் வாழ்க்கையில் மங்களகரமான விஷயங்கள் நடக்கப்போவதைக் குறிக்கிறது. இதன் மூலம் நீண்ட நாட்களாக அவர் சந்தித்து வந்த மன அழுத்தங்கள் அல்லது தீராத பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் நீங்கிவிடும் என்பதற்கான அறிகுறியாக இந்தக் கனவு கருதப்படுகிறது.
கனவில் பல்லியைக் கொல்வது போலக் காண்பது ஒருவருக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரக்கூடியதாகும். இந்த கனவானது அந்த நபரின் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்து, வளமான வாழ்க்கை தேடி வரும் என்பதைக் குறிக்கிறது. மேலும், கஷ்டமான சூழ்நிலைகளையும் துணிச்சலுடன் சமாளிக்கும் வகையில் அவரின் மன தைரியம் உயரும் என்றும் கனவு சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.
அதே சமயம், கனவில் ஒரே நேரத்தில் பல பல்லிகளைப் பார்த்தால், வாழ்க்கையில் ஒரே நேரத்தில் பல்வேறு பிரச்சனைகளையும், தொழில் வாழ்க்கையில் தடைகளையும் சந்தித்து மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும் கடினமான காலத்தைக் குறிக்கிறது. அதுபோல, ஒரு சிறிய குட்டி பல்லியைக் கனவில் காண்பது வரும் காலத்தில் சற்று சிரமங்களை அள்ளிக்கொடுக்கும்; இதனால் எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாவதுடன், எடுத்துக்கொண்ட வேலையை முடிப்பதற்கு அதிக கடின உழைப்பு தேவைப்படும்.
