தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், கரூர் தொகுதியில் திமுக மற்றும் அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் கோவில் இனாம் நிலப் பிரச்சினை தொடர்பாக அதிமுகவினர் இன்று தான்தோன்றிமலை பகுதியில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்தனர். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தடுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இந்த மோதல் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரை, திமுகவினர் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. மேலும், நோட்டீஸ் விநியோகம் செய்த அதிமுக பெண் நிர்வாகிகளை திமுகவினர் தாக்கியதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுக்கடங்காமல் சென்ற கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் காவல்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் திணறினர்.
தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே செந்தில் பாலாஜி மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், தேர்தலுக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்துள்ள இந்த வன்முறைச் சம்பவம் கரூர் தொகுதியில் உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
