“ஒரே போன் கால்.. மொத்தமாக மாறிய போர் சூழல்”… டிரம்பின் மனதை மாற்றினாரா ஆசிம் முனீர்?… பாகிஸ்தான் மண்ணில் ட்ரம்ப்பின் தூதர்கள் நடத்தும் மெகா டீல்…!!!

By Muthu Mani on சித்திரை 20, 2026

Spread the love

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் தற்போது பெரும் நிச்சயமற்ற நிலையை எட்டியுள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏப்ரல் 21-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ள சூழலில், ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. லெபனான் போர்நிறுத்தத்திற்குப் பிறகு திறக்கப்பட்ட இந்த முக்கிய கடல்வழிப் பாதை, 24 மணி நேரத்திற்குள் மீண்டும் முடக்கப்பட்டிருப்பது அமைதி முயற்சிகளுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இந்த இக்கட்டான சூழலில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் ஆலோசனைகளை மேற்கொண்டார். ஹோர்முஸ் ஜலசந்தியின் முற்றுகை பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை முனீர் சுட்டிக்காட்டிய நிலையில், அதனைத் தீவிரமாகப் பரிசீலிப்பதாக டிரம்ப் உறுதியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஒருங்கிணைக்க இஸ்லாமாபாத் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பாகிஸ்தானின் நூர்கான் விமானப்படைத் தளத்தில் அமெரிக்க ராணுவ விமானங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கனவே வந்தடைந்துள்ளனர்.

   

இருப்பினும், ஈரானின் கடுமையான நிலைப்பாடு பேச்சுவார்த்தையைச் சிக்கலாக்கியுள்ளது. அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க மறுக்கும் ஈரானிய அதிபர் பெஷெஷ்கியன், ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் தொழில்நுட்ப உரிமைகளை எந்தவொரு வெளிநாட்டாலும் பறிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் இந்த பிடிவாதமான போக்கும், அமெரிக்காவுடனான நேரடி மோதல் போக்கும் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.