தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி கூட்ட பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக மீண்டும் தங்கள் ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. அதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கட்சியிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஒரே நாளில் திமுகவை சேர்ந்த நகராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவரின் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது. திட்டக்குடி நகராட்சி தலைவர் வெண்ணிலா தனது சொந்த கட்சி கவுன்சிலர்களாலையே தோற்கடிக்கப்பட்டு பதவியை இழந்தார். அதேபோல சொத்து வரி சர்ச்சையில் சிக்கிய ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் வெங்கட் கோபு அறிவித்துள்ளார். ஒரே நாளில் இரண்டு தலைவர்களின் பதவி பறிக்கப்பட்டது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது
