தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக பல வியூகங்களை வகுத்து வருகின்றது. குறிப்பாக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றது.
இந்நிலையில் ராமேஸ்வரம் கெந்தமாதன பர்வதம் பகுதியை சேர்ந்த சங்கர் 2005 ஆம் ஆண்டு திமுக சார்பில் நகராட்சி வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு 2022 ஆம் ஆண்டு மீண்டும் நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட திமுக சீட் கொடுக்காததால் நகராட்சி எட்டாவது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு மீண்டும் திமுகவில் இணைந்து தற்போது திமுக நகர் பொருளாளராக உள்ளார்.
இந்நிலையில் திமுகவின் ஹிந்து விரோதம் மற்றும் ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று முன்தினம் பாஜகவினர் நடத்திய பொதுக்கூட்ட மேடையில் கட்சியிலிருந்து சங்கர் விலகி மாவட்ட தலைவர் முரளிதரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். திமுகவின் முக்கிய புள்ளியாக இருந்த இவ்வாறு திடீரென்று விலகி பாஜகவில் இணைந்துள்ளது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
