“அடிச்சுக்கிற மாதிரி நடிப்போம்.. ஆனா ஒன்னா இருப்போம்!”… விஜய் அரசை வீழ்த்த கைகோர்த்த திமுக – அதிமுக?… பின்னணி என்ன?… அதிரும் தமிழக அரசியல்…!!!

By Muthu Mani on வைகாசி 16, 2026

Spread the love

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவின் எஸ்பி வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து, அதிமுக அதிகாரப்பூர்வமாக மீண்டும் இரண்டாக உடைந்துள்ளது. தவெக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையிலும், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்த சூழலில், எடப்பாடி பழனிசாமியின் கொறடா உத்தரவை மீறி இந்த 25 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்துள்ளனர். இதனால் கட்சி மற்றும் சின்னம் யாருக்கு சொந்தம் என்ற அடுத்தகட்ட சட்டப் போராட்டம் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்பி வேலுமணி தரப்புகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ளது. கொறடா உத்தரவை மீறிய 25 பேரையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய எம்பிஎஸ் தரப்பு புகார் அளித்துள்ள நிலையில், சபாநாயகர் கொறடாவை அங்கீகரிக்காததால் தங்கள் மீது இந்தச் சட்டம் பாயாது என வேலுமணி தரப்பு வாதிட்டு வருகிறது.

இந்நிலையில், தனிப்பெரும்பான்மை இல்லாத தவெக அரசு, தங்களை ‘தீய சக்தி’ என விமர்சித்த திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, கம்யூனிஸ்டுகள் மற்றும் முஸ்லீம் லீக் ஆகியவற்றின் ஆதரவோடுதான் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. தவெக அரசுக்கு ஆதரவளித்தாலும் விசிக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து திமுக கூட்டணியிலேயே நீடிப்பதாக அறிவித்துள்ளதால், தவெக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற சூழலே நிலவுகிறது. இதனைச் சுட்டிக்காட்டி, தவெக அரசு தங்களது தயவில்தான் இயங்குகிறது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியிருந்தார். இந்தச் சூழலில், அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ஆதரவு மூலம் முதலமைச்சர் விஜய் நிலையான பெரும்பான்மையைப் பெற்றுவிடுவதை திமுக தலைமை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

   

தங்களது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தவெக அரசு நீடிக்கும் வரை மட்டுமே, தவெகவை தங்களால் மறைமுகமாகக் கட்டுப்படுத்த முடியும் என அறிவாலயம் நம்புகிறது. ஒருவேளை ஆதரவளித்த அதிமுகவின் 25 எம்.எல்.ஏக்களில் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு விஜய் அரசு ஸ்திரமான நிலையை எட்டிவிட்டால், தவெகவின் மீதான தங்களது பிடி நழுவிவிடும் என திமுக கணக்கு போடுகிறது. எனவே, விஜய் அரசுக்கு ஆதரவளித்த அந்த 25 அதிமுக எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யும் முயற்சியில், தங்களது பரம எதிரியான அதிமுகவிற்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் வழங்க திமுக தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, ‘கட்சித் தலைமை சொல்பவரையே கொறடாவாக சபாநாயகர் அங்கீகரிக்க வேண்டும்’ என திமுகவின் முன்னாள் சபாநாயகர் அப்பாவு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

   

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக ஆட்சி அமைக்கட்டும் என்றும் அதற்கு ஆறு மாதங்களுக்கு எந்த இடையூறும் செய்ய மாட்டோம் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையாக அறிவித்திருந்தார். ஆனால், தற்போது தவெக அரசு நிலையானதாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவும், தங்களது கூட்டணிக் கட்சிகளின் தயவிலேயே விஜய் ஆட்சி நடத்த வேண்டும் என்பதற்காகவும் அதிமுகவிற்குச் சட்ட ஆலோசனைகளை வழங்க திமுக முன்வந்துள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்க அதிமுகவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்க முயன்றதாகவும் வெளியான தகவல்களோடு இதனை இணைத்துப் பார்க்கும் தவெகவினர், “இதுதான் திமுகவின் பெருந்தன்மையா?” எனச் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.