தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. எப்படியாவது மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நிலைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். கட்சியிலும் களையெடுக்கும் பணிகளை தொடங்கியுள்ள முதல்வர் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுடனும் தொடர் ஆலோசனையில் இருந்து வருகிறார். நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டது.
இப்படியான நிலையில் தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையில் களம் கண்ட பலம் வாய்ந்த கூட்டணி தற்போதும் சிதறாமல் உள்ளது. அந்தக் கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், ஐ யூஎம் எல், மமக, தவாக, மாவிக, ஆதபே என கடந்த தேர்தலில் போட்டியிட்ட முக்கிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக மக்கள் நீதி மையமும் இணைந்துள்ளது. அதனால் தமிழகத்தில் மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போதே திமுகவின் கூட்டணி கூடுதல் பலத்துடன் நிலைத்து நிற்கிறது. இதுவே முதல்வர் ஸ்டாலின் மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடிக்க ஒரு ஊந்து கோளாக இருக்கும் என கூறப்படுகிறது.
