வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான சுங்க விதிகளில் (Customs Rules) மத்திய நிதியமைச்சகம் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி, ஓராண்டிற்கு மேலாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியப் பயணிகள் தங்க நகைகளை வரியின்றி கொண்டு வருவதற்கான சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள் 40 கிராம் வரையிலும், ஆண்கள் உள்ளிட்ட மற்றவர்கள் 20 கிராம் வரையிலும் தங்க நகைகளை எவ்வித வரியுமின்றி இந்தியாவுக்குக் கொண்டு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த விதிகளின்படி, ரூ. 75,000 மதிப்பிலான நகைகளுக்கு மட்டுமே வரிச் சலுகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது மதிப்பை அடிப்படையாகக் கொள்ளாமல், எடையின் அடிப்படையில் இந்தச் சலுகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இந்தப் புதிய நடைமுறையானது நேற்று (2026, பிப்ரவரி 2) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
