உணவே மருந்து என வாழ்ந்த காலகட்டம் மாறி தற்போது மருந்தே உணவு என்ற நிலைக்கு மாறிவிட்டோம். நம் தாத்தா பாட்டி காலத்தில் இல்லாத பல நோய்கள் இப்போது சிறு குழந்தைகளுக்கே வந்து கொண்டிருக்கும் சூழலில், மெடிக்கல் மாஃபியாவின் அட்டூழியம் இன்னொரு பக்கம் அரங்கேறி வருகிறது. விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் வெளியான போது மருத்துவ துறையை சேர்ந்த பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம், மருத்துவத்துறையில் சாதாரணமாக முழு உடற் பரிசோதனை செய்தாலேயே பல வியாதிகள் இருக்கும் எனக் கூறி காசை சில மருத்துவர்கள் கறந்து விடுவதாக கூறியிருந்தது அப்படம். இதெல்லாம் உண்மையில் நடக்குமா என மக்கள் பலர் சிந்தித்து வந்த நிலையில், இதுபோல் நடப்பது உண்மை தான் என இயக்குநர் விக்ரமனின் மனைவி கூறியிருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

#image_title
பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா ஒரு குச்சிப்புடி நடனக் கலைஞர். நடனமாடிக் கொண்டிருக்கும் போதே திடீரென ஏற்பட்ட முதுகுவலியால் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சரியான காரணங்கள் எதுவும் சொல்லாமல் மருத்துவம் பார்த்து மருந்து மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை கொடுத்துள்ளனர். இறுதியில் மருத்துவமனையில் இருந்து அவர் நடக்க முடியாமல் வீல் சேரில் வீடு திரும்பியுள்ளார்.

#image_title
கிட்டத்தட்ட 5 வருடங்கள் படுக்கையிலேயே இருந்து வரும் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா, சமீபத்தில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் தனக்கு நடந்த மருத்துவ சிகிச்சை குறித்து பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனதளவில் தான் நன்றாக இருப்பதாகவும், ஆனால் தனது கணவர் தான் தன்னுடைய நிலையைக் கண்டு வருத்தப்படுவதாகவும் கூறியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தப் போது, தனக்கு சிறுநீர் சரியாக செல்லவில்லை என்பதால், ஒரு சிப் வைத்து பரிசோதனை செய்ய சுமார் 25 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனவும், ஒருவேளை இந்தப் பரிசோதனை தோல்வியடைந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதால், அந்த சிகிச்சையை மேற்கொள்ளவில்லை என ஜெயப்பிரியா கூறியுள்ளார்.

#image_title
தான் ஒரு இயக்குநரின் மனைவி என்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள் என எண்ணி தங்களிடம் இருந்து பணம் பறித்ததாகவும், மருத்துவத் துறையில் தற்போது மெடிக்கல் மாஃபியா நடந்து வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அத்தோடு தனது மகன் தற்போது சினிமாவில் நடிகராக அறிமுகமாக இருப்பதாகவும், அவர் சினிமாவில் நடிப்பதை பார்த்து விட வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் அவர் தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
