தமிழ் சினிமாவில் ரத்தம், அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் வன்முறை போன்ற விஷயங்கள் எதுவும் இல்லாமல் மென்மையான திரைப்படங்களை இயக்கக் கூடியவர் தான் இயக்குனர் விக்ரமன். இவர் இயக்கிய முதல் திரைப்படம் புதுவசந்தம். இந்தப் படத்தில் முரளி, சார்லி, ஆனந்த் பாபு மற்றும் சித்தாரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். திருமணமாகாத நான்கு ஆண்களுடன் ஒரு பெண் நட்பாக பழக முடியும் அவர்களோடு ஒரே வீட்டில் தங்கி இருக்க முடியும் என்று நாகரிகமான கதையை அமைத்து படத்தை உருவாக்கி இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து புதிய மன்னர்கள், கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தைப்போல, உன்னை நினைத்து மற்றும் பிரியமான தோழி என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார்.

இதில் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக திரைப்படம் தான் விஜயின் சினிமா கேரியரை திருப்பி போட்டது. சரத்குமாரை வைத்து இயக்கிய சூரியவம்சம் தமிழ் சினிமாவில் இதுவரை மிகவும் அதிக பேர் பார்த்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அதனைப் போலவே விஜயகாந்துக்கும் வானத்தைப்போல என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார். விக்ரமன் எப்போதுமே வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர். மனதில் ஒன்று வெளியே ஒன்று என பேசும் பழக்கம் அவருக்கு கிடையாது. ஒரு கட்டத்தில் விக்ரமன் சொல்வது சரி என்பதை புரிந்து கொண்டு நடிகர்கள் பலரும் இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து விடுவார்கள்.

இப்படியான நிலையில் விக்ரமன் சமீபத்தில் அளித்த பேட்டியில், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படத்தில் மூன்று நாட்கள் நடித்துவிட்டு பிறகு தயாரிப்பாளரை அழைத்து நான் நடித்த நந்தவன தேரு திரைப்படம் மாதிரியே இருக்கு இந்த படம் சரியா வராதுன்னு தோணுது என கார்த்திக் கூறினார். உடனே தயாரிப்பாளர் என்னிடம் வந்து கார்த்திக்கு இப்படி சொல்றாரு என்று சொன்னதும் ஷூட்டிங் முடிச்சுட்டு கார்த்திக் இருந்த ரூமுக்கு போய் என்ன பிரச்சனை என்று கேட்டேன். இல்ல சார் இந்த படம் ஏதோ நான் நடிச்ச நந்தவன தேரு படம் மாதிரியே இருக்கு.

அந்தப் படத்துல ஹீரோயினிய நான் பாடகி ஆக்குவேன் அது மாதிரி தான் இதுவும் எனக்கு தோணுது என கூறினார். இல்ல சார் அந்தக் கதை வேறு இந்த கதை வேறு இதுல பாடகியா இருக்கவங்க தனது சாதனைக்கு பின்னால் உள்ள நபரை பற்றி பேசுகிறார். முற்றிலும் மாறுபட்ட கதை தான் இது. உங்களுக்கு விருப்பம் இருந்தா பண்ணுங்க இல்லனா நான் இதே கதையை வேற ஹீரோவா வச்சு பண்ணி ஹிட் கொடுத்து காட்டுகிறேன் என்று சவால் விட்டேன். அதன் பிறகு தான் கார்த்திக் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் நடித்தார் என விக்ரமன் பேசியுள்ளார்.
