தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். வயதானாலும் இன்னும் முன்னணி நடிகர் என்ற இடத்தை விட்டுக் கொடுக்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட் கொடுத்துள்ளது. ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே தோல்வியை தழுவியது என கூறலாம். என் நிலையில் 32 ஆண்டுகளுக்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான ஒரு மொக்கை படம் வெற்றி படமாக மாறிய கதையை அப்படத்தின் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சில சமயத்தில் மொக்கை சினிமா ஓடும். என்னுடைய சிங்காரவேலன் மொக்கை படம் தான்.

கதையே இல்லாம கமல் சாரை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் அது. சின்ன குழந்தையா இருக்கும்போது காணாமல் போன பெண்ணை தேடி கண்டுபிடித்து கல்யாணம் செய்ய வேண்டும், இதெல்லாம் ஒரு கதையா? எனக்கு ரொம்ப ஆச்சரியமான விஷயம் என்றால் இந்த ஒன் லைனை தயாரிப்பாளர் ஓகே என சொல்லிவிட்டார். படம் முழுவதும் பாடல்களை கொடுத்து விடுகிறேன் என இளையராஜா சார் கூறிவிட்டார். படம் வெளியாவதற்கு முன்பு தயவு செஞ்சு இந்த படத்தை பார்க்க வருபவர்கள் மூளையை கழட்டி வைத்து விட்டு வருமாறு கடிதம் எழுதினேன். ஏனென்றால் படம் பார்த்துவிட்டு என்னை யாரும் திட்ட விடக்கூடாது என்பதற்காகத்தான்.

இப்படி செய்ததும் இளையராஜா என்னை கூப்பிட்டு என்னையா என கேட்டாரு. உடனே ஆமா சார் இப்பதான் சின்ன கவுண்டர் படம் நல்லா ஓடிட்டு இருக்கு, அந்தப் படம் எடுத்தவனா இந்த படத்தை எடுத்தான், கதையே இல்லாம ஒரு படத்தை எடுத்து விட்டானே என யாரும் என்ன திட்டக்கூடாது என கூறினேன். அந்த ஒத்த லைன வச்சுக்கிட்டு படத்துல நிறைய கதையை சேர்த்துக்கிட்டோம். குறிப்பா தேங்காயும் நெல்லும் விளையக்கூடிய பொள்ளாச்சி என்ற ஊரில் இருந்து மெட்ராசுக்கு யாராவது கருவாடு எடுத்துக்கிட்டு வருவாங்களா? மெட்ராஸில் இல்லாத கருவாடா? ஆனா இப்போ வரைக்கும் அந்த படத்துல அந்த சீன் பற்றி யாரு என்ன கேள்வி கேட்கல. அப்படியான ரசிகர்கள் தான் எனக்கு மிகவும் பிடித்த ரசிகர்கள்.

நான் சொன்னதைப் போல ரசிகர்கள் வீட்டிலேயே மூளைய கழட்டி வச்சிட்டு வந்து தான் படம் பார்த்தாங்க. ஒரு படம் வெற்றி பெற நல்ல கதையும் திரைக்கதையும் கடின உழைப்பும் இருந்தா மட்டும் போதாது நல்ல நேரமும் இருக்கணும். ஒண்ணுமே இல்லாம எடுத்த படம் தான் கடைசியில் வெற்றி படமா அமைஞ்சது என்று இயக்குனர் பேசியுள்ளார். கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான சிங்காரவேலன் திரைப்படம் தற்போது 32 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இந்த படம் குறித்து படத்தின் இயக்குனரே இவ்வாறு கூறியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
