‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்’ போன்ற பிரம்மாண்டப் படங்களை இயக்கி, நூற்றுக்கணக்கான கோடி வசூலை ஈட்டி, ‘பான் இந்தியா’ திரைப்படங்களுக்கான அடித்தளத்தை அமைத்தவர் இயக்குநர் ராஜமௌலி. தற்போது இவர், மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், இப்படம் 2027ஆம் ஆண்டு கோடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘வாரணாசி’ பட விழாவில் பேசிய ராஜமௌலி, இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் முதல் முறையாகத் தொடக்கம் முதல் இறுதி வரை IMAX 1.43:1 ஃபார்மேட்டில் முழுமையாக எடுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். இந்தத் தொழில்நுட்பத்தில் அதிக கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முழு ஐமேக்ஸ் 1.43:1 ஃபார்மேட்டை திரையிடக்கூடிய திரையரங்குகள் உலகளவில் வெறும் 42 மட்டுமே உள்ளன.
இந்தியாவில் கோவையில் உள்ள பிராட்வே திரையரங்கில் மட்டுமே இந்த அதிநவீன வசதி உள்ளது. இதனால், படம் வெளியாகும் காலத்திற்குள் இந்தியாவில் உள்ள மற்ற திரையரங்க உரிமையாளர்கள் இந்த IMAX 1.43:1 வசதியைத் தங்கள் திரையரங்குகளில் ஏற்படுத்த வேண்டும் என்று ராஜமௌலி விழா மேடையில் கோரிக்கை விடுத்தார். இது படக்குழுவுக்கு இருக்கும் பெரிய தொழில்நுட்ப சவாலாகப் பார்க்கப்படுகிறது.
