இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘மார்கழியில் மக்கள் இசை’ என்ற நிகழ்ச்சி சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் மிஷ்கின் பேசியதாவது, இந்த சினிமாவில் நான் 28 ஆண்டுகளாக இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இரண்டு சல்லடைகளால் நான் மனிதர்களை சல்லடை போட்டு அலசி பார்க்கிறேன்.
அதில் முதல் சல்லடை ஆளுமை. அந்த ஆளுமை என்ற சல்லடையில் நான் போட்டு சலித்து பார்த்ததில் நான் ஆச்சரியப்பட்டு பிரமித்த ஆளுமைகள் கமல் சார் பிசி ஸ்ரீராம் மற்றும் இளையராஜா. இவர்களை எல்லாம் நான் மிகப்பெரிய ஆளுமைகளாக பார்த்திருக்கிறேன். இந்த மனிதர்கள் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
இன்னொரு சல்லடை அறம். அந்த சல்லடையை போட்டு நான் சலித்து பார்த்ததில் இருந்த ஒரே மனிதன் இந்த ரஞ்சித் தான். என் சினிமாவில் அறிவான நபர்களை நான் பார்த்திருக்கிறேன். அழுக்கான மனிதர்களை பார்த்திருக்கிறேன். உண்மையான மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். அதில் முதல் நபராக நான் ரஞ்சித்தை தான் சொல்லுவேன். இந்த 28 ஆண்டுகளில் நான் பார்த்த பொக்கிஷம் இந்த ரஞ்சித் என்று இயக்குனர் மிஷ்கின் வெகுவாக பாராட்டிப் பேசியிருக்கிறார்.
