தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர்களில் ஒருவர் சிவாஜி கணேசன். பி யு சின்னப்பா, எம் ஆர் ராதா, பாலையா என சிறந்த நடிகர்களின் வரிசையில் பராசக்தி மூலமாக அதிர்வலையை உருவாக்கியவர் சிவாஜி கணேசன். அதன் பிறகு 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிகர் திலகமாக வலம் வந்தார். ஆனால் அவருக்கு ஒரு முறை கூட நடிப்புக்கான தேசிய விருது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குக் காரணம் அப்போது தேசிய விருதுகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய வங்காள மற்றும் மலையாள சினிமாவினர்தான். அவர்கள் சிவாஜியின் நடிப்பை மிகை நடிப்பு என கடுமையான விமர்சனங்களையும் கேலிகளையும் கொண்டிருந்தனர். தமிழ் சினிமாவிலேயே கூட எம் ஜி ஆர் ரசிகர்கள் சிவாஜி நடிப்பை அழுமூஞ்சி நடிப்பு என்றும் ஓவர் ஆக்டிங் நடிப்பு என்றும் கேலி செய்வது நடந்துள்ளது.

1980 களில் ரஜினி, கமல் போன்ற இளம் நடிகர்களின் வரவாலும், சினிமாவின் முகம் மாறியதாலும், சிவாஜி கணேசன் கதாநாயக வேடங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதற்கு பிறகு அவருக்கு முதல் மரியாதை, தேவர் மகன் மற்றும் படையப்பா போன்ற படங்களில் சிறப்பான கதாபாத்திரங்கள் அமைந்தன.
இந்நிலையில் சேது படம் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குனர் பாலா, அடுத்து தான் இயக்க இருந்த நந்தா படத்தில் ராஜ்கிரண் நடித்திருந்த கதாபாத்திரத்துக்காக முதலில் சிவாஜி கணேசனைதான் நடிக்க அனுகியுள்ளார். இதற்காக சிவாஜியின் அன்னை இல்லத்துக்கு சென்று அவருக்கு கதையும் சொல்லியுள்ளார்.

கதையைக் கேட்ட சிவாஜி கணேசன் நடிப்பதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் அப்போது சிவாஜி கணேசனுக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு தன்னுடைய படத்தில் கடல் பகுதிகளில் எல்லாம் ஷூட்டிங் நடத்த வேண்டி உள்ளதால், அவரை கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காக சிவாஜி கணேசன் அதில் நடிக்க வேண்டாம் என பாலா முடிவு செய்துள்ளார். அதன் பிறகுதான் ராஜ்கிரணை அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைத்துள்ளார்.
