தமிழ் சினிமாவில் கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.
அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.
இயக்குனர் பாலாவுக்கு சமீபகாலமாக திரைவாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. அவர் இயக்கிய தாரை தப்பட்டை படம் அட்டர் ப்ளாப் ஆனது. வர்மா படம் அவர் இயக்கியது பிடிக்கவில்லை என்று மீண்டும் வேறொரு இயக்குனரால் இயக்கப்பட்டது. அதே போல சூர்யாவை வைத்து அவர் முதலில் இயக்கிய வணங்கான் படத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து அருண் விஜய்யை வைத்து அவர் வணங்கான் படத்தை ரிலீஸ் செய்துள்ளார். அந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளது.
பாலா ஆரம்ப காலத்தில் இயக்கிய நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய இரு படங்களிலும் கதாநாயகியாக லைலா நடித்திருந்தார். இரண்டு படங்களிலும் லைலாவுக்கு வித்தியாசமானக் கதாபாத்திரங்கள். லைலாவின் திரை வாழ்க்கையில் இந்த இரண்டு படங்களும் மிக முக்கியமானவையாக அமைந்தன.
ஆனால் திடீரென லைலா தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது இயக்குனர் பாலா “லைலாவுக்கும் எனக்கும் இடையே காதல் என்று எழுதி எழுதி அவளை ஊரையே காலி பண்ணி செல்ல வைத்து விட்டார்கள்” எனக் கூறியிருந்தார்.