தன் அப்பா கஸ்தூரிராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் தனுஷ் நடிகராக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் மற்றும் புதுப்பேட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை பெற்றார். தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் அவதாரம் எடுத்த தனுஷ் முதன் முதலில் பவர் பாண்டி என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் ராயன் திரைப்படத்தை இயக்கி மாஸ் ஹிட் கொடுத்தார்.

தற்போது தன்னுடைய அக்கா மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த முடிவு செய்து தனுஷ் இயக்கிய திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த திரைப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், சரத்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் முற்றிலும் காதல் கதையை கொண்டது தான். இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா தனுஷ் மீண்டும் தன்னை ஒரு இயக்குனராக நிரூபித்துள்ளாரா என்று பார்க்கலாம்.

படத்தில் காதலுக்கும் காதல் தோல்விக்கும் இடையே மாட்டிக்கொண்ட இளைஞர் இறுதியில் கைவிட்டது காதலையா அல்லது காதல் தோல்வி ஐயா என்பதை தான் இந்த படத்தின் இயக்குனர் தனுஷ் சொல்ல முயற்சிக்கின்றார். குடும்பங்கள் கொண்டாடக்கூடிய படமாகவும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் ஆபாச காட்சிகள் இல்லாத படமாகவும் வெளியாகி உள்ளது. நிலா கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனிகா சுரேந்திரன் மீதான காதலை மறக்க முடியாமல் இருக்கும் பிரபுவுக்கு திருமணம் செய்து வைக்க சரண்யா பொன்வண்ணன் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் முடிவு செய்கின்றனர். பிறகு பிரபு தனக்கு திருமணம் வேண்டாம் என்று தெரிவிக்கிறார்.

வழக்கமாக தமிழ் சினிமாவில் நடப்பது போல இந்த காட்சிகள் நகர்கிறது. பிறகு குடும்பத்தினர் ஹீரோவை வலுக்கட்டாயமாக பெண் பார்க்க அழைத்துச் செல்கின்றனர். அங்கு சென்று பார்த்தால் பிரபுவுக்கு டுவிஸ்ட் காத்திருக்கிறது. அவர் பார்க்கச் சென்ற பெண் வேறு யாருமில்லை அவருடன் பள்ளியில் படித்த பிரியா பிரகாஷ் வாரியர் தான். பிரபுவை பார்த்ததும் பிரியா வாரியர் டே இங்க என்னடா பண்ற என்கின்றார். நீ எனக்கு மாப்பிள்ளை வருவ என்று கனவுல கூட நினைச்சு பார்க்கலை என்று கூற பிரபுவும் அப்படித்தான் கூறுகின்றார். அதன் பிறகு பிரபுவும் பிரியா வாரியரும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பேசி பழகி புரிந்து கொண்டு திருமணம் செய்வதாக முடிவு எடுக்க இதற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்கிறார்கள்.

அதன் பிறகு பிரியா வாரியர் போடும் கண்டிஷங்களை கண்டும் மிரண்டு போகும் பிரபு அவரிடம் காதல் எதையும் எதிர்பார்த்து வராது என்று தெரிவிக்கின்றார். நீ சொல்வது எல்லாம் சரிதான் ஆனால் நாம லவ்வர்ஸ் கிடையாது கல்யாணம் பண்ணிக்க போறோம் அதனால் திருமணம் என்று வரும்போது கண்டிஷன் இருக்கும் அதை எல்லாத்தையும் நீ பாலோ பண்ண வேண்டும் என்று தெரிவிக்கின்றார். பிறகு திடீரென பிரபுவுக்கு தன்னுடைய முன்னாள் காதலி நிலாவின் திருமண அழைப்பிதழ் வரும் நிலையில் தன்னுடைய காதல் குறித்தும் காதல் தோல்வி குறித்தும் கதை சொல்கின்றார். கடைசியில் என்ன ஆனது யார் யாருடன் சேர்ந்தார்கள் என்பது தான் படத்தின் கதை. இந்த படம் முழுவதும் கிரிஞ்சாகத்தான் இருக்கின்றது.

மலையாளத்தில் வந்த பிரேமலதா திரைப்படம் 2கே கிட்ஸ்களை கவர்ந்த அளவுக்கு கூட நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் இல்லை என்பது தான் வருத்தம். மேலோட்டமாக ஜாலியாக நண்பர்களுக்குள் நடக்கும் காதல் கதையை போல தான் தனுஷ் இந்த படத்தை எடுத்துள்ளார். அனிகா மற்றும் பிரியா வாரியர் நடிப்பு நன்றாக உள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் பட்டையை கிளப்பியுள்ளார். இந்த படத்தில் வரும் இளம் நடிகர்களை பார்த்தால் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களைப் போல இருக்கின்றன. இவர்களுக்கு திருமணம் நடைபெறும் காட்சிகளை பார்க்கும் போது என்ன சார் குழந்தை திருமணமா என்று கேட்கும் அளவுக்கு உள்ளது. பெரிய எதிர்பார்ப்புடன் சென்று பார்க்கக் கூடிய அளவுக்கு படத்தில் ஒன்றுமில்லை. தனுசுக்காக படத்தை ஒரு முறை பார்க்கலாம்.
