பகீர்.. சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் பெண் சடலம்… திருமண மண்டபமாக மாறும் தொழிற்சாலைக் கிணற்றில் பயங்கரம்… பதறவைக்கும் பின்னணி…!

By Swetha on ஆனி 18, 2026

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், தற்போது செயல்படாமல் இருக்கும் ஒரு தனியார் தொழிற்சாலையைத் திருமண மண்டபமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அந்த வளாகத்தில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றிற்குள் சோதனை செய்தபோது, அங்கு சாக்கு மூட்டை ஒன்றில் பெண்ணின் சடலம் இருப்பதை உறுதி செய்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில், தடயவியல் நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள இப்பகுதியைச் சமூக விரோதிகள் தங்களின் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துகிறார்களா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. குற்றவாளிகளைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் காவல் துறையினர், அண்மையில் காணாமல் போன பெண்கள் தொடர்பான புகார்களின் தரவுத்தளத்தோடு ஒப்பிட்டும் பார்த்து வருகின்றனர்.

   

முதற்கட்ட விசாரணையில், சாக்கு மூட்டையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்ணாக இருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. எனினும், சடலம் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதால் அந்தப் பெண்ணின் பெயர், முகவரி உள்ளிட்ட முழுமையான விவரங்களை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. அந்தப் பெண் யார், அவரைப் பல நாட்களுக்கு முன்பே கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியது யார் என்பது குறித்துப் புலனாய்வுத் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.