“உங்க அம்மா தான் சூனியம் வச்சிருக்காங்க” அதான் உங்க அப்பா செத்துட்டாரு…ஜோதிடர் பேச்சைக் கேட்டுப் பெற்ற தாயையே கொன்ற மகள்… மூடநம்பிக்கையின் உச்சம்…!!

By Soundarya on மாசி 13, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் ஜோதிடரின் பேச்சை நம்பி, பெற்ற தாயையே மகள் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுசித்ரா (33) என்பவரின் தந்தை 18 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவரது மரணம் குறித்து ஒரு ஜோதிடரிடம் சுசித்ரா ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது அந்த ஜோதிடர், சுசித்ராவின் தாயாரே தனது கணவருக்குச் சூனியம் வைத்து அவரைக் கொன்றதாகக் கூறி விஷத்தைக் கக்கியுள்ளார். இதனைத் தீர விசாரிக்காமல் அப்படியே நம்பிய சுசித்ரா, தனது தாயார் மீதான வன்மத்தை வளர்த்துக்கொண்டு அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தாய் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, சுசித்ரா தலையணையால் அவர் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறச் செய்து படுகொலை செய்துள்ளார். கொலை செய்த பின்னர், தனது தாய் இயற்கையாகவே இறந்துவிட்டது போல நாடகமாடித் தப்பிக்க முயன்றார். இருப்பினும், சுசித்ராவின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த காவல்துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், ஜோதிடரின் பேச்சைக் கேட்டுத் தாயைக் கொன்ற உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். மூடநம்பிக்கையால் ஒரு குடும்பமே சிதைந்து போன இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.