கர்நாடக மாநிலம் பெங்களூருவில், சமையல் செய்வது தொடர்பாக மாமியாருடன் ஏற்பட்ட தொடர் மோதலால் பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சுஷ்மா (35), பிரபல டெல் (Dell) நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தவர். இவருக்கும் புனீத் குமார் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.
கடந்த சில காலமாகவே சுஷ்மாவிற்கும் அவரது மாமியார் கல்பனாவிற்கும் இடையே சிறு சிறு விஷயங்களுக்காக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, சுஷ்மாவைச் சமையல் செய்ய விடாமல் மாமியார் தடுத்து வந்ததாகவும், இதன் காரணமாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மாமியார் தன்னைத் தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தி வருவதாகத் தனது பெற்றோரிடமும் சுஷ்மா பலமுறை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மீண்டும் மாமியாருடன் ஏற்பட்ட கடுமையான சண்டையால் மிகுந்த மனவேதனை அடைந்த சுஷ்மா, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், சுஷ்மாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகனின் எதிர்காலம் குறித்துச் சிந்திக்காமல் ஒரு மென்பொருள் பொறியாளர் இத்தகைய முடிவை எடுத்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுஷ்மாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுஷ்மாவின் கணவர் புனீத் குமாரை ஏற்கனவே போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மாமியார் கல்பனாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு சிறிய சமையல் அறையில் தொடங்கிய ஈகோ மோதல் ஒரு உயிரைப் பறித்திருப்பது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.
