தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தொடர்ந்து இரண்டு நாட்கள் கனமழை கொட்டி தீர்த்தது. பிறகு அது புயலாக வலுப்பெறாமல் அப்படியே கரையைக் கடந்ததால் மழைப்பொழிவு குறைந்தது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 27ஆம் தேதி காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் இன்று கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
