தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் குழு, தமிழக முதலமைச்சர் விஜய்யை இன்று மாலை நேரில் சந்திக்க உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இல்லாமல், சி.வி. சண்முகம் தனித்துவமாக ஒரு குழுவை வழிநடத்திச் செல்வது அக்கட்சியின் உள்விவகாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சி.வி. சண்முகத்தின் இந்த நகர்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் புதிய அரசுக்குத் தங்கள் ஆதரவை வழங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அண்மையில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், 118 என்ற பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார். இத்தகையச் சூழலில், அதிமுகவின் ஒரு முக்கியப் பிரிவினர் அவரைச் சந்திக்கச் செல்வது, தமிழக அரசியலில் ஒரு புதிய கூட்டணி உருவாகவோ அல்லது அதிமுகவில் பெரிய பிளவு ஏற்படவோ வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
