சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள உம்பிலிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் ராணி. இவரது கணவர் சாமிநாதன் முன்னாள் ராணுவ வீரர். ராணிக்கும் அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான நல்லதம்பி என்பவருக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தகாத உறவு இருந்தது. இந்நிலையில், 2000ஆம் ஆண்டு ராணி அந்தத் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு விலகிச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நல்லதம்பி, ராணியுடன் தகராறு செய்து, கட்டையால் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்தார். அதன் பின்னர், அவர் தலைமறைவாகிவிட்டார்.
சுமார் 25 ஆண்டுகளாகக் கொலையாளி பிடிபடாமல் இருந்து வந்த இந்த வழக்கில், சேலம் எஸ்.பி. கௌதம்கோயல் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். கொலையாளி நல்லதம்பி (60) ஆந்திராவுக்குத் தப்பிச் சென்று அங்கு ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும், அவர் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து உறவினர்களைப் பார்த்துச் சென்றதும் தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று உம்பிலிக்கம்பட்டிக்கு வந்த நல்லதம்பியை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். தகாத உறவைத் துண்டித்துக் கொண்டதால் ராணியைக் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். 35 வயதில் கொலை செய்து தலைமறைவான கொலையாளியை 25 ஆண்டுகளுக்குப் பிறகு 60 வயதில் கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார். விசாரணைக்குப் பின் நல்லதம்பி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
