ரூ. 88 கோடி முதலீட்டு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான விசாகா ரத்தோட், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவுக்கு வெற்றிகரமாகத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். மத்திய புலனாய்வு அமைப்பு, வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் மூலம் இந்த முயற்சி சாத்தியமாகியுள்ளது.
விசாகா ரத்தோட் தனது கணவர் அவினாஷ் ரத்தோட்டுடன் இணைந்து, முதலீட்டாளர்களுக்கு மாதந்தோறும் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ. 88 கோடி வரை மோசடி செய்துள்ளார். இந்த நிதியை பல்வேறு வங்கி மற்றும் டிமேட் கணக்குகளுக்கு மாற்றி இவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்திய அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, இண்டர்போல் அமைப்பு இவர்கள் இருவருக்கும் எதிராக ‘ரெட் நோட்டீஸ்’ பிறப்பித்தது.
இதன் தொடர்ச்சியாக, வழக்கின் முதன்மைச் சூத்திரதாரியான அவினாஷ் ரத்தோட் கடந்த ஜூலை 23 அன்று இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு புனே காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 3 அன்று புனே வந்தடைந்த விசாகா ரத்தோட்டையும் மகாராஷ்டிர காவல்துறை கைது செய்து காவலில் எடுத்துள்ளது. வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் குற்றவாளிகளை மீட்கும் தீவிர நடவடிக்கையின் கீழ், 2019 முதல் ஜூலை 2026 வரை 36 நாடுகளிலிருந்து 274 தலைமறைவு குற்றவாளிகளை இந்தியா வெற்றிகரமாக மீட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
