கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து கேரளாவுக்குக் கொடிய ‘எம்.டி.எம்.ஏ’ வகைச் செயற்கைப் போதைப்பொருட்களைக் கடத்தி வந்து இரவு நேர விருந்துகளுக்குச் சப்ளை செய்துவந்த முகமது ஷாஃபி மற்றும் அவரது பெண் தோழி சரிதா ஆகிய லிவ்-இன் ஜோடியை எர்ணாகுளம் எக்சைஸ் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சோதனைகளின் போது காவல்துறையினரிடம் பிடிபடாமல் இருக்கச் சரிதா கையாண்ட உத்திகளைக் கேட்டு அதிகாரிகளே வியப்பில் ஆழ்ந்துள்ளனர். போதைப்பொருளை மென்ஸ்ட்ருவல் கப்பில் அடைத்துத் தனது ரகசியப் பகுதியில் மறைத்தும், சிறிய அளவிலான பொட்டலங்களை உள்ளாடை பேடிங்கில் வைத்துத் தைத்தும், மீதியுள்ள போதைப்பொருளை வீட்டின் பிரிட்ஜில் உள்ள முட்டை வைக்கும் தட்டிலும் மறைத்து வைத்து இவர்கள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும், பெங்களூருவில் ரூ. 1.15 லட்சத்திற்கு வாங்கும் 100 கிராம் போதைப்பொருளுடன் 20 கிராம் அஜினோமோட்டோ பொடியைக் கலந்து கலப்படம் செய்து, ஒரு கிராமைக் ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை அதிக விலைக்கு விற்று வாரம் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டியுள்ளனர். ரகசியத் தகவலின் அடிப்படையில் களமிறங்கிய ‘ஆபரேஷன் தண்டர்’ சிறப்புப் படையினர், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு விடுதி அறையிலும் ஆலப்புழையில் உள்ள வீட்டிலும் நடத்திய சோதனையில் மொத்தம் 94 கிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் மற்றும் ரொக்கப் பணத்தைக் பறிமுதல் செய்தனர். கைதான இருவரிடமும் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
