பிரபல காமெடி நடிகரான கவுண்டமணி பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கவுண்டமணியும் செந்திலும் இணைந்து நடிக்கும் காமெடி காட்சிகளுக்கு மக்களிடையே தனி வரவேற்பு உள்ளது. இருவரும் இணைந்து பண்ணும் லூட்டிகளுக்கு அளவே கிடையாது. கடந்த 2000-ஆம் ஆண்டு கார்த்திக், மந்த்ரா, திவ்யா உன்னி, கவுண்டமணி, செந்தில், மனோரமா ஆகியோர் நடிப்பில் கண்ணன் வருவான் என்ற திரைப்படம் உருவானது.
சுந்தர் சி இயக்கிய இந்த படத்திற்கு சிங்கம் புலி கதை வசனம் எழுதியுள்ளார். சுராஜ் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இந்த படத்தின் போது நடைபெற்ற சுவாரசியமான அனுபவம் குறித்து இயக்குனர் சுராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, கண்ணன் வருவான் சென்டிமென்ட் திரைப்படம் என்று தெரியாமல் கவுண்டமணி நடிக்க ஒப்புக்கொண்டார்.
கார்த்திக் வெளிநாட்டிலிருந்து வருவதால் கவுண்டமணி அவருக்காக சிக்கன் நூடுல்ஸ், ப்ரைட் ரைஸ் போன்ற உணவுகளை தயார் செய்து வைத்திருப்பார். ஆனால் கார்த்திக் அதை சாப்பிடாமல் மனோரமா செய்து வைத்திருக்கும் பால் சாதத்தை கேட்பார். மனோரமா ஊட்டி விட கார்த்திக் பால் சாதத்தை சாப்பிடுவார்.
அந்த சீனில் நடித்து முடித்த பிறகு கவுண்டமணி என்னை அழைத்து எங்க ஊர்ல நாய்க்கு தான்யா பால் சாதம்லா தருவாங்க. என்னய்யா படம் எடுக்குறீங்க. உங்களுக்கு தேவையில்லாத சப்ஜெக்ட் எல்லாம் எடுக்குறீங்க. நீங்க காமெடி படம் எடுப்பீங்கன்னு தான் நான் வந்தேன். இது ரொம்ப சென்டிமென்ட்டா இருக்கு. யார்யா இந்த படத்துக்கு கதை வசனம் எழுதியது என கேட்டு டென்ஷன் ஆகிட்டாரு. இதனை நகைச்சுவையாக சுராஜ் கூறியுள்ளார்.