கடலூர் மாவட்டத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு, 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு பள்ளித் தோழிகளைத் திட்டமிட்டு கடத்திய ஒரு கும்பல், அவர்களைப் பல இடங்களுக்குக் கொண்டு சென்று பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியது. இந்தச் சதிச் செயலில் இட்லி கடை நடத்தி வந்த ஒரு பெண்ணும், மதபோதகர் ஒருவரும் முக்கிய பங்காற்றியது விசாரணையில் தெரியவந்தது.
அந்தச் சிறுமிகளைச் சதீஷ்குமார் – தமிழரசி தம்பதியிடம் விற்று, ஒரு வாடகை வீட்டில் அடைத்து வைத்துத் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர். அங்கிருந்து ஒரு வழியாகத் தப்பி வந்த மாணவிகள் காவல்துறையிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, இந்தச் சீரழிவுச் செயலில் ஈடுபட்ட 23 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.
இந்த வழக்கைச் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், ஏற்கனவே மதபோதகர் உட்படப் பலருக்குக் கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதில் நீண்ட காலமாகத் தலைமறைவாக இருந்த சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி மற்றும் கபிலன் ஆகிய மூவரும் தற்போது பிடிபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் அனைத்தும் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்தது. சுமார் 12 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்குச் சட்டப்பூர்வமான நீதி கிடைத்துள்ளது.
