“இனி வாழ முடியாது.. நான் சாவப்போறேன்”… 800 கோடி ரூபாயை மோசடி செய்த கேபிள் ஆபரேட்டர்… தஞ்சையை அதிரவைத்த வீடியோ…!

By Nanthini on பங்குனி 18, 2026

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் சிராஜ்பூர் நகரில் வசித்து வரும் ‘கேபிள் செந்தில்’ என்பவர், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு, சிங்கப்பூரைச் சேர்ந்த முகமது பேகம் என்பவரது நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் வீட்டு மனைகளாகப் பிரித்து விற்பனை செய்ததாக செந்தில் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக முகமது பேகம் அளித்த புகாரின் பேரில், செந்தில் மற்றும் அவரது மனைவி உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே அவர் முன்ஜாமீன் பெற்று நீதிமன்ற விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், தற்போது மேலும் சில புதிய புகார்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

புதிய புகார்களின் அடிப்படையில் செந்திலை கைது செய்ய இன்று காவல்துறையினர் அவரது வீட்டிற்குச் சென்றனர். இதையறிந்த அவர், வீட்டை விட்டு வெளியே வர மறுத்ததோடு, ஜன்னல் வழியாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என்றும், உண்மையில் நில உரிமையாளரான முகமது பேகம் தான் மோசடியில் ஈடுபடுவதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். தான் ஒரு சாதாரண இடைத்தரகராக (Broker) மட்டுமே செயல்பட்டு, அதற்கான கமிஷன் தொகையை முறைப்படி வங்கிக் கணக்கில் பெற்று, வரியும் செலுத்தி இருப்பதாக அவர் விளக்கம் அளித்தார்.

   

மேலும் அவர் பேசுகையில், தன்னிடம் இருக்கும் பணத்தைப் பறிக்கவும், ஏற்கனவே முறைப்படி விற்பனை செய்யப்பட்ட சொத்துக்களை மீண்டும் அபகரிக்கும் நோக்கத்துடனும் முகமது பேகம் இத்தகைய நாடகங்களை அரங்கேற்றி வருவதாகத் தெரிவித்தார். ஏற்கனவே முடிந்துபோன இந்த விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்து, காவல் ஆய்வாளர் ரவிமதி தன்னை மிரட்டி வருவதாகவும், மன உளைச்சலால் இனி வாழ வழியில்லை என்பதால் தற்கொலை செய்யப் போவதாகவும் அவர் ஆவேசமாகக் கூறினார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி தனக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

   

காவல்துறையினர் செந்திலை கைது செய்ய முற்பட்ட போது, அவர் வீட்டைப் பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் தற்கொலை மிரட்டல் விடுத்தது சிராஜ்பூர் பகுதியில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இந்த நில மோசடிப் புகாரில் இருக்கும் உண்மைத் தன்மையைக் கண்டறிய விரிவான விசாரணை தேவை என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஒருபுறம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், மறுபுறம் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கப் பாதுகாப்புப் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.